வாங்க நண்பர்களே கிட்டி விளையாட போலாம்
நான் என்னோட சின்ன வயசுல விளையாண்ட விளையாட்டுகளைப் பற்றி தான் இப்ப உங்ககிட்ட சொல்லப் போறேன்.
அதுல ரொம்ப ரொம்ப பிடிச்ச விளையாட்டு கில்லி.
![]() |
| கில்லி விளையாட்டு இமேஜ் ai |
சில ஊர்ல இதை கிட்டிபிள்ளை விளையாட்டு ன்னும் சொல்லுவாங்க.
இந்த கிட்டி விளையாட்டை பார்த்து தான் இன்றைய கிரிக்கெட் விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்ட துன்னு தரப்பினருடைய வாதமும் இருக்கு.
அதை நினைச்சு பார்த்தா, அந்த பேச்சுல உண்மையும் இருக்கு.
முதல்ல நல்ல வலுவான, நேராக இருக்கக்கூடிய ஒரு குச்சியை எடுத்துக்குவாங்க.
அதுல ஒன்று உள்ளங்கை அளவு, இன்னொன்று முழங்கை அளவு.
உள்ளங்கை அளவுள்ள குச்சிதான் கிட்டி அல்லது கில்லி.
முழங்கை அளவுள்ள குச்சி தாய் குச்சி.
அந்த உள்ளங்கை அளவுள்ள குச்சியை, இரண்டு பக்கமும் பென்சில் சீவுற மாதிரி கூர்மையா சீவி வச்சிருப்பாங்க.
அதேபோல முழங்கை அளவுள்ள குச்சியையும் சீவி வச்சுக்குவாங்க.
இரண்டு முனைகளும் கூர்மையா இருந்தா தான் விளையாட சுகம்.
அதுக்குப் பிறகு தரையில நேரா ஒரு சின்ன குழி தோண்டுவாங்க.
அந்த குழி தான் எல்லாத்துக்கும் மையம்.
ஆளுக்கு நாலு நாலு பேரா,
சில நேரம் அஞ்சு அஞ்சு பேரா,
டீம் பிரிச்சுக்கிட்டு நின்னுப்பாங்க.
தரையில போட்ட அந்த குழிக்குள்ள கிட்டி பிள்ளையை வச்சு,
தாய் குச்சியால அடியில வச்சு தூக்கி விடுவாங்க.
அது மேலே பறந்து போகும்.
அந்த கிட்டியை எதிரணி டீம்ல யாராவது கையில பிடிச்சிட்டா,
அவர் உடனே அவுட்.
அதே நேரத்துல,
அந்த கிட்டி எல்லாரையும் தாண்டி போய் விழுந்துட்டாலோ,
அல்லது முன்னாடியே விழுந்துட்டாலோ,
எதிரணி டீம் அந்த கிட்டியை எடுத்து,
குழி இருக்குற இடத்துல இருக்குற ஆட்டக்காரருடைய தாய் குச்சியின் மேலே எறியணும்.
அப்படி எறியும்போது அந்த கிட்டி தாய் குச்சியில பட்டுச்சின்னா –
அப்போவும் அவுட்.
ஒருவேளை படலன்னா,
அவங்களுக்கு மூணு முறை அடிக்க வாய்ப்பு இருக்கு.
கிட்டி பிள்ளை இரண்டு பக்கமும் கூர்மையா இருக்குறதுனால,
தாய் குச்சியால அடிக்கும்போது அது மேலே எகிறும்.
அதை அப்படியே வேகமா அடிப்பாங்க.
அது எவ்வளவு தூரம் போகுதோ,
அந்த இடம் வரைக்கும் போவாங்க.
மீண்டும் அதே மாதிரி அடிப்பாங்க.
இப்படி மூணு முறை அடிப்பாங்க.
அந்த மூணு அடிக்கு பிறகு,
அங்கிருந்து குழி வரைக்கும் இருக்குற தூரத்தை,
அந்த கிட்டி பிள்ளையோட அளவைக் கொண்டு,
அல்லது முழங்கை அளவுள்ள குச்சியை வைத்து
அளந்து கொண்டே வருவாங்க.
அதுல எத்தனை வருதோ,
அதுவே அவங்களோட எண்ணிக்கை.
இன்றைய மொழியில சொன்னா, அதுதான் அவங்களோட ரன்கள்.
அதே நேரத்துல,
அந்த மூணு முறை அடிக்கும் போது
கிட்டியை கேட்ச் பிடிச்சிட்டா,
அப்போவும் அவுட் தான்.
இதே மாதிரி ஒவ்வொரு டீம்ல இருக்குற எல்லாரும் விளையாடி முடிச்ச பிறகு,
எடுத்த ரன்களை வைத்து தான்
வெற்றி – தோல்வி தீர்மானிப்பாங்க.
சில நேரங்கள்ல,
அவர்கள் அடிச்ச தூரத்தை குத்துமதிப்பா ரன்களா சொல்லுவாங்க.
அது உண்மையில வரலன்னா,
அவங்களோட ஆட்டம் இழப்பு.
அதனால தான்,
“வந்திருக்கா இல்லையா”ன்னு பாக்க,
அந்த குச்சியை எடுத்துக்கிட்டு
அளந்து கொண்டே வருவாங்க.
இப்படி சுவாரசியம், சண்டை, சிரிப்பு,
எல்லாமே கலந்த விளையாட்டு தான் இந்த கில்லி.
மேலும் எதிரணி டீமால வெல்ல முடியாத அளவுக்கு
ரன்கள் எடுத்துட்டாங்கன்னா,
அவங்கள காய்ச்சுவாங்க.
இந்த காய்ச்சலுக்கு ஒரு தனி விதி இருக்கு.
ஒரு வட்டமான ரவுண்ட் போட்டு,
அதுக்குள்ள நின்னுக்கிட்டு
கிட்டி பிள்ளையை அடிச்சு விடுவாங்க.
அதை எதிரணி டீம்ல யாராவது கேட்ச் பிடிச்சிட்டா,
அவுட்.
அப்படி பிடிக்கலன்னா,
அந்த கிட்டியை எடுத்து
அவர்கள் போட்ட அந்த ரவுண்டுக்குள்ள போட்டு விட்டாலும்,
காய்ச்சி முடிஞ்சிடும்.
சில நேரம் ஏழு காச்சு வரைக்கும் காத்திருப்பாங்க.
அப்போவும் பிடிக்கலன்னா,
மீண்டும் விளையாட்டு தொடரும்.
இப்படி விளையாடுறதால,
உடம்புல இருக்குற எல்லா சோர்வும் போயிடும்.
வியர்வையோட சேர்ந்து
தேவையில்லாத அழுக்குகளும் வெளியேறிடும்.
கை, கால், தோள் எல்லாத்துக்கும்
நல்ல வலிமை கிடைக்கும்.
இப்ப நினைச்சு பார்த்தா,
நாம் சொன்ன இந்த குட்டி குச்சி விளையாட்டை
இன்றைக்கு உலகம் முழுக்க
கிரிக்கெட்ன்னு விளையாடிட்டு இருக்காங்க.
இதுல நடக்குற எல்லா சம்பவங்களும்
கிரிக்கெட்டுலயும் நடக்குது.
கேட்ச் பிடிச்சா அவுட்.
பந்தை ஸ்டம்புல அடிச்சா அவுட்.
அடிச்சா ரன்கள்.
அதனால தான் சொல்றேன்,
கில்லி தான் கிரிக்கெட்டோட அடிப்படைன்னு.
ஆனா இன்றைக்கு,
இந்த கில்லி விளையாட்டு
முற்றிலும் அழிந்து போகக்கூடிய நிலைமைக்கு வந்துடுச்சு.
அதை மீண்டும் நம்ம சிறுவர்களுக்கு கற்றுத்தந்து,
அவங்கள ஆரோக்கியமா வளர்க்கணும்னு
மனப்பூர்வமா கேட்டுக்குறேன்.
என் அன்பார்ந்த நண்பர்களே,
நீங்களும் உங்களோட சின்ன வயசுல விளையாண்ட விளையாட்டுகள்,
கில்லி,
அல்லது வேற எந்த விளையாட்டா இருந்தாலும்
என்னோட பகிர்ந்து கொள்ளுங்க.
ஒரு சம்பவத்தை சொல்லி இதை முடிக்கிறேன்.
ஒருமுறை எதிரணி டீம்ல ஒருத்தன்
கிட்டியை ஓங்கி அடிச்சான்.
அது நேரா வந்து
என்னோட நெற்றில குத்தி நின்னுச்சு.
ரத்தம் கொட்டோ கொட்டுன்னு கொட்டியது.
ஆனா அந்த நேரத்துல,
நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து
என்னை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய்,
தேவையான உதவிகளையும்
ட்ரீட்மெண்டையும் செய்து அனுப்பினாங்க.
அந்த சம்பவத்தை
இன்னும் என்னால மறக்கவே முடியல.
நன்றி.

கருத்துகள்